செலுலாய்ட் சோழன் – 59
(From Mr.Sudhangan Face Book)
சிவாஜி பாடங்களில் பலரும் கவனிக்கத் தவறுவது, பாடல் காட்சிகளில் அவருடைய உச்சரிப்பு, முக பாவங்கள், தானே பாடுவது மாதிரியாக குரல வளைகளும் சேர்ந்து நடிப்பது எல்லாமே பார்ப்பவர்களை வியக்க வைக்கும்!
இவர் பாடுகிறாரா? அல்லது பின்னனி பாடகர்கள் பாடுகிறார்களா ? என்கிற சந்தேகம் வரும்!
இந்த பாட்டுக்கான பாவங்களை அவரது முதல் படமான `பராசக்தி’ படத்திலிருந்தே பார்க்கலாம்!
`தூக்கு தூக்கி’ படம் வரும்வரையில் சிவாஜிக்கு பின்னகிக் குரல் கொடுத்தவர் சி.எஸ். ஜெயராமன்!
`சபாஷ் மீனா’ படத்தில் வந்த ` காணா இன்பம் கனிந்ததேனோ!’ பாடலை டி.ஏ. மோதி பாடினார்!
`தூக்கு தூக்கி’ படத்திற்கு பிறகு சிவாஜி என்றால் டி.எம்.எஸ். என்றாகிப் போனது!
இந்த இடத்தில் டி.எம்.எஸ். பற்றியும் நிச்சயம் சொல்லியாக வேண்டும்!
அவர் ஒரு குரல் நடிகர்!
நடிகர்களுக்கேற்ற மாதிரி அவரது குரல் மாறும்!
முன்பு ஒரு முறை ஜெயா டிவிக்காக எனக்கு அளித்த பேட்டியில் டி.எம்.எஸ்.ஸிடம் இது பற்றி நான் கேட்டேன்!
அப்போது அவர் சொன்னார்,` இந்த காலம் மாதிரி பாடல் பதிவுகள் எல்லாம் அப்போது கிடையாது. ஒரு படத்துக்கு பாட போகும்போது முதலில் இசையமைப்பாளரிடம் இந்த படத்தில் யார் கதாநாயகன்? நான் யாருக்கு பாடப்போகிறேன் ? என்பதை கேட்டுக் கொள்வேன். பிறகு அதற்கேற்ப என் குரலை சரி செய்து கொள்வேன்! உதாரணமாக சிவாஜிக்கு அடிவயிற்றிலிருந்து குரல் எடுத்து பாடவேண்டும்! எம்.ஜி.ஆருக்கு மேல் குரலிலிருந்து பாடுவேன்! ஜெமினி என்றால் சற்றே ஜலதோஷம் வந்தமாதிரி மாற்றிக்கொள்வேன்!’
அப்போது நான் அவரிடம் கேட்டேன், ` இரவும் பகலும்’ என்பது ஜெய்சங்கரின் முதல் படம்! அந்த படத்தில் நீங்கள் ஜெய்சங்கர் பாடுவது மாதிரியே பாடினீர்களே எப்படி? என்று கேட்டேன்.
`அந்த படத்திற்கு இசை டி.ஆர். பாப்பா! அவரிடம் கேட்டேன் இந்த படத்திற்கு யார் கதாநாயகன்? என்றேன். அவர் உடனே ஜெய்சங்கர் என்கிற ஓரு புதுப் பையன்! அவர் குரல் எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவரை வரவழைத்து படத்தின் சில வசனங்களை கொடுத்து பேசச் சொல்லிக் கேட்டேன். அதற்குப் பிறகு தான் நான் பாடினேன்’ என்றார்!
இப்போது நீங்கள் பழைய பாடல்களை கேட்டுப் பாருங்கள்! பழைய பாடல் ரசனையுள்ளவர்கள் இந்த பாடல் யார் நடித்த படத்தினுடையது என்று சுலபமாக சொல்லிவிடலாம்!
என்னால் ஒரு பழைய டி.எம்.எஸ். பாடலை கேட்டால் உடனே அது எந்த நடிகருக்கானது என்பதைச் சொல்ல முடியும்!
அதே போல் தான் கதாநாயகனாக நடித்த ` அருணகிரிநாதர்’ ` பட்டினத்தார்’ ` கல்லும் கனியாகும்’ படங்களில் அவருக்கென்று தனிக் குரலை வைத்துக் கொள்வார் டி.எம்.எஸ்.!
அதே மாதிரி தான் பி.சுசீலாவும்!
நன்றாக உன்னிப்பாகக் கேட்டால், பத்மினிக்கு, சரோஜோதேவி, சாவித்திரி,கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, காஞ்சனா, என்று ஒவ்வொரு கதாநாயகிக்கு ஒரு குரல் வைத்திருப்பார் பி.சுசீலா!
சிவாஜி என்னிடம் சொன்ன பிறகுதான் நான் சுசீலாவும் ஒரு குரல் நடிகை என்பதை புரிந்து கொண்டேன்.
அவருடன் டி.எம்.எஸ். புகழ் பாடிக்கொண்டிருந்தேன்! அப்போது அவர் சொன்னார். ` சுசீலா எந்த வகையில குறைஞ்சது. அதுவும் நடிகைக்கு ஒரு குரல் வைத்திருக்கும்!’ என்றார் சிவாஜி!
அதன் பிறகு கவனித்தேன் அவர் சொன்னது எத்தனை உண்மை!
சிவாஜி – பத்மினி ஜோடியாக நடித்த படம் ` புதையல்’. இந்த படத்திற்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி! இதில் எல்லோருக்கு சட்டென்று நினைவிற்கு வரும் பாடல்! ` சின்ன சின்ன இழைப் பின்னி பின்னி வரும்’ பாடல் தான் சட்டென்று நினவிற்கு வரும்!
இதில் சுசீலா பாடிய ஒரு பாடலுக்கு பத்மினி உதடசைத்திருப்பார் ` தங்க மோகனத் தாமரையே’ பாடல் பத்மினி பாடுகிற மாதிரியே இருக்கும்! இந்தப் பாடலை எழுதியவர் ஆத்மநாதன்!
அடுத்து தங்கமலை ரகசியம் படத்தில் ஜமுனாவிற்கு சுசீலா பாடிய பாடல் ` அமுதை பொழியும் நிலவே ! நீ அருகில் வராதது ஏனோ!’ மோகன ராகத்தில் அமைந்த பாடல்! படத்தை பார்த்தால் ஜமுனாவுக்கான தனிக்குரலை சுசீலா காற்றில் மிதக்க விட்டிருப்பார்!
அன்னையின் ஆணை படத்தில் சிவாஜிக்கு ஜோடி சாவித்ரி!
இந்த படத்திற்கு இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு! இதில் கு.மா. பாலசுப்ரமணியம் எழுதிய பாடல்! `கனவின் மாயா லோகத்திலே’ இதில் சாவித்திரிக்கு ஒரு தனிக்குரல்!
பாகப்பிரிவினை படத்தில் சரோஜாதேவிக்கு அவfர் பாடிய பாடல் ` தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ’ இதற்கு ஒரு தனி சுசீலா பாணி!
`அன்னை இல்லம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடி தேவிகா!
`மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்! மறுநாள் எழந்து பார்ப்போம்! அந்த பாடலில் தேவிகா ஒளிவீசுவார் சுசீலா என்கிற விளக்கினால்!
மோட்டார் சுந்தரம் பிள்ளை இதுதான் ஜெயலலிதா நடித்த முதல் சிவாஜி படம்! இந்த படத்தில் அவர் சிவாஜியின் மகள் ரவிசந்திரனை காதலிப்பார்! இருவருக்குமான டூயட் ` காத்திருந்த கண்களே! கதையளந்த நெஞ்சமே! இதில் ரவிசந்திரன் – ஜெயலலிதாவிற்காக பி.பி.எஸ். சுசிலா பாடியிருப்பார்கள்!
புதுப் பெண்ணான ஜெயலலிதாவிற்கேற்ப குழந்தையாய் ஜொலிக்கும் சுசீலா குரல்!
`முத்துக்களோ கண்கள்! தித்திப்பதோ கன்னம்!’ இதில் சிவாஜி கேஆர். விஜயா ஜோடி! கேட்டால் விஜயா பாடுவது மாதிரி இருக்கும்!
இதையெல்லா சிவாஜி சொன்ன பிறகுதான் நான் தெரிந்து கொண்டேன்!
மறுபடியும் சிவாஜி பாடுவது பற்றி பேச்சு வந்தபோது அவர் சொன்னார், ` என்னால் அப்படி பாட முடிகிறதெனால், எனக்கு நாடக காலத்திலேயே சங்கீத பயிற்சி உண்டு. ஒரு பாடலை கேட்டால் போதும் அப்படியே திரும்ப உரக்க பாடுவேன் என் குரலில்!
`பாலும் பழமும்’ படத்தில் ` போனால் போகட்டு போடா’ பாடலை நான் பாடிக்கொண்டே நடந்து போவேன். இயக்குனர் பீம்சிங்கிடம் மகாலிங்கம் என்று ஒரு உதவியாளர் இருந்தார்!
நான் லோகேஷனில் நடந்து கொண்டே போவேன்,
என் பின்னால் அவர் அந்த பாடலை சொல்லிக்கொண்டே வந்தார்.
நான் பாடிக்கொண்டே நடந்தேன். உண்மையில் அது ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட பாடல்.
அதை பின்னால் கட் செய்து போட்டார்கள்.
அந்த ஒரு ஷாட்டில் நானும் உதவியாளர் மகாலிங்கமும் இந்த பாடலுக்காக முக்கால் மைல் தூரம் நடந்திருப்போம்’ என்றார்!
இந்த சிவாஜியிடம் இன்னும் எத்தனை விந்தைகள்?
(தொடரும்)